Showing posts with label திரையிசை. Show all posts
Showing posts with label திரையிசை. Show all posts

Monday, April 13, 2009

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு சாதாரண திரையிசை ரசிகனிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. தொடர்ந்து பார்ப்பதின் பயனாய் பல மாற்றங்களை திரைப்பாடல்கள் கேட்பதில் இப்போது உணர்கிறேன். முதன்மையாக, ஒரு திரைப்பாடலில் உள்ள மிகநுணுக்கமான விடயங்களை என் போன்ற சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கவனித்து ரசிக்க முடிகிறது. அதோடு, பாடல் பாடுவதில் எடுக்கப்படும் சிரத்தைகளையும் நன்கு அறியமுடிகிறது. இந்நிகழ்ச்சியின் நடுவர்கள் கொடுக்கும் பாடல், மற்றும் பாடுதல் பற்றிய குறிப்புகளின் பங்கு இதில் மிக முக்கியமானவை. இப்பொழுதெல்லாம் எந்த ஒரு பாடலைக்கேட்டாலும் முன்பைவிட அதிக ஈடுபாட்டோடு அப்பாடலின் சிறப்பம்சங்கள், மற்றும் அதைப்பாடியவிதம் என மிக நெருக்கமாய் ரசிக்கிறேன். முன்பு கேட்டுரசித்த பாடல்களும் இன்று மீண்டும் கேட்கையில் ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது.

அதேசமயம், ஒரு திரைப்பாடலை நேரடியாகப் பாடக்கேட்டு அனுபவிப்பதற்கு நிகரான இன்பத்தை 'பதியப்பட்ட' பாடல்களை கேட்பதில் பெறமுடியவில்லையோ என்றும் இப்போது தோன்றுகிறது. ஒரு பாடலையே பகுதியாகப் பிரித்துப்பாடி பின் இணைத்தல்/கலத்தல் போன்ற தொழில்நுட்பங்கள், பதியப்பட்ட பாடல்களுக்கு ஜீவனற்ற ஒரு செயற்கைத் தன்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சில பாடல்களில் பாடகர் ஒரு வரியை முழுமையாக முடிப்பதற்கு முன்னரே அவரின் குரலில் அடுத்தவரி ஒலிக்கத் தொடங்குதல், மற்றும் ஒருவர் பாடிக்கொண்டிருக்கும் போது அவர் குரலிலேயெ மற்றொரு வரி அல்லது ஹம்மிங் இணையாக ஒலிப்பது போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்கள் கேட்க உறுத்துகிறது. சில பாடல்களில் இவ்வுத்தி கேட்க நன்றாக இருப்பினும்கூட, உணர்வுப்பூர்வமாக 'பாடலோடு ஒன்ற' இயல்வதில்லை (நல்ல அனிமேசன் அல்லது அட்வெஞ்சர் படம் பார்த்த உணர்வையே தருகிறது).

மொத்தத்தில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சாதாரண ரசிகனை மேம்பட்ட ரசனையுடன் திரைப்பாடல்களை கூர்ந்து அவதானிக்கச் செய்கிறது. விளைவாக, பாடல்-பதியும் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் செயற்கைத்தன்மையால், நல்ல பாடல்கள் தரும் அருகாமையை சிலநேரங்களில் இழக்கவும்நேர்கிறது.


Pages

Flickr